ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது பால்க்கன் 9 என்ற விண்கலத்தை முதற்தடவையாக வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவிச் சோதித்தது. எதிர்காலத்தில் மனிதனை ஏற்றிச் செல்லக்கூடிய இவ்விண்கலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை 1845 UTC மணிக்கு ஆளில்லாமல் விண்ணை நோக்கிச் செலுத்தப்பட்டது.
கலிபோர்னியாவைச் சேந்த ஸ்பேஸ் X என்ற நிறுவனம் நசாவின் பண உதவியுடன் இவ்விண்கலத்தை அமைத்திருந்தது.
நேற்று இவ்விண்கலம் முதற்தடவையாக செலுத்தப்பட்ட போது எஞ்சினில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறினால் ஏவுதல் கடைசி செக்கனில் நிறுத்தப்படட்து. பின்னர் எஞ்சின் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஏவப்பட்டது.
பால்க்கன் 9 பூமியின் சுற்று வட்டத்தை அடைந்து விட்டதென்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது முதலாவது பயணத்தில் பால்க்கன் 9 தன்னுடன் டிராகன் சரக்கு விண்கலம் ஒன்றைக் கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் இந்த டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பொருட்களையும் மனிதர்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும்.