செவ்வாய், டிசம்பர் 14, 2010
இதுவரை செலுத்தப்பட்ட விண்கலங்களுள் பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் வொயேஜர் 1 விண்கலம் தற்போது எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே செல்லத் தயாராயிருக்கிறது.
பூமியில் இருந்து தற்போது 17.4 பில். கிமீ (10.8 பில். மைல்கள்) தூரத்தில் வொயேஜர்-1 ஆளில்லா விண்கலம் நிலை கொண்டுள்ளது. இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. "வொயேஜர் விண்ணுக்கு ஏவப்படும் போது, விண்வெளி 20 ஆண்டுகள் மட்டுமே பழமையானதாக எமக்கு இருந்தது. அப்போது இவ்விண்கலம் இவ்வளவு ஆண்டுகாலம் நிலைத்திருக்கும் என எவருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை," என வொயேஜர் திட்ட ஆய்வாளர் எட்வர்ட் ஸ்ரோன் தெரிவித்தார்.
நாசாவின் வொயேஜர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராயவே அனுப்பப்பட்டது. இப்பணியை அது 1989 ஆம் ஆண்டில் முடித்தது. அதன் பின்னர் வொயேஜர் கப்பல் மேலும் ஆழமாக விண்வெளிக்கு, பால் வழி அண்டத்தின் மையத்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது.
விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் நல்ல நிலையில் இயங்குவதாகவும், போதிய தகவல்களை பூமிக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.