ஐதராபாத் : செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இச்சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. ஆனால், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், கட்டியை அகற்ற, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் நரசிம்மனின் இடது தொடையில், சிறிய கட்டி ஏற்பட்டது. "பெடங்குலேடெட் டெர்மோலைபோமா' என கூறப்படும் இக்கட்டியால், சிரமப்பட்டு வந்தார். அவரது தனி டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் காலை, மனைவி விமலாவுடன் மருத்துவமனைக்கு வந்த கவர்னரை, மருத்துவத் துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார், காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்குமார், பிளாஸ்டிக் சர்ஜன் மோகனகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று, "அட்மிட்' செய்தனர். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அரை மணி நேரத்தில், இடது தொடையில் இருந்த கட்டியை அகற்றினர். அரை மணி நேரம் ஓய்வெடுத்த கவர்னர் நரசிம்மன், மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார்.
டாக்டர் ரமேஷ்குமார் கூறுகையில், "ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வரும் அரசு மருத்துவமனை மீதுள்ள நம்பிக்கையால், கவர்னர் இங்கு சிகிச்சை பெற்றது முழு திருப்தி அளிக்கிறது' என்றார்.பின்பற்றுவரா அரசியல்வாதிகள்...: சிறு வியாதி என்றாலும், தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் அரசியல்வாதிகள் மத்தியில், மாநிலத்தின் முதல் குடிமகனாக விளங்கும் கவர்னர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகளும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகளின் தரம், வெளி உலகிற்கு தெரியவரும்